Saturday, January 10, 2015

தமிழனுக்கு மானமில்லையா... என்ன பேச்சு இது...!

நேத்து ராத்திரி சன் நியூஸ் செய்தி அலைவரிசையில ஒரு விவாதமுங்க. தமிழர்களுடைய பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தேவையா... இல்லையா.... இதுதான் கரு.

மொத்தம் நாலு பேரு பேசுனாங்க. அதுல ஒருத்தரு பேரு தெரியலைங்க. சொட்டைத்தலை. ரொம்ப தெனாவட்டா உக்காந்திருந்தாரு.

உதட்டுக்கு மேலே முடி இல்லைங்க. ஆனா, அடிக்கடி முறுக்கி விட்டுக்கிட்டு இருந்தாருங்க. எறும்பு ஏற முடியாத இளநீர் தலைங்க. என்ன விளங்கலையா.. அதுதாங்க வழுக்கைத் தலை.

வயசுல பெரியவரு ஒருத்தர். அனுபவத்தில சிறந்தவர் ஒருத்தர். பாரம்பரியத்தை அறிந்தவர் ஒருத்தர்.

ஆனா, இவரு மட்டும் சந்திர மண்டலத்தில இருந்து எந்திரிச்சு வந்தவரு மாதிரி காலை பப்பரப்பான்னு நீட்டிக்கிட்டு இருந்தாருங்க.

நல்ல வேளை... எதுக்க இருந்தவருக்கும் இவருக்கும் இடைவெளி கொஞ்சம் அதிகமுங்க. இல்லையின்னா.. காலு... அவரு தோளு மேல தொங்கலாட்டாம் போட்டு இருக்குமுங்க.

மாடு வளக்கிறதுல இருக்கிற அருமை பெருமைகளை ஒருத்தரு சொன்னாருங்க. ஆனா, அதைக் கிண்டலடிச்சு பேசி ஒட்டு மொத்த தமிழர்களின் மானத்தையும் வண்டியில ஏத்தி தொண்டிக்கு அனுப்பி வச்சுருச்சுங்க அந்த வரலாறு தெரியாத வரட்டுத் தவளையின் நாக்கு நாட்டியம்.

காளை மாடு வளக்கிறது உலகத்துக்கே வீரத்தை வெளிச்சம் போட்டுக்காட்டிய தமிழினத்து இளங் காளைகளின் தனிச்சிறப்புன்னு சொன்னா..

சிங்கத்தை வளக்க வேண்டியது தானேன்னு அசிங்கமா பேசி இமயத்தில கொடி நட்ட தமிழனின் இதயத்தில எருக்கம் பால ஊத்தீட்டாருங்க.

ஜல்லிக்கட்டை நடத்துறதுக்கு அரசாங்கம் அனுமதி கொடுக்குதா இல்லையாங்கிறது வேறு விஷயமுங்க. ஆனா.. அதுக்கு ஆதரவா பேசுறோமுன்னு தமிழங்க மூஞ்சியில அந்த ஆளு கழுவிக் கழுவி ஊத்தினது என்னோட நெஞ்சுக்குள்ள நஞ்சா நிக்கிதுங்க.

அந்த ஆளு உழைச்சு சம்பாதித்தவரு மாதிரி தெரியலைங்க. அப்பன் சொத்தில ஆப்பம் சுட்டுக்கிட்டு திரியிற அலப்பறைக் கேசு மாதிரி இருக்குதுங்க.

சொட்டைத் தலை... அப்பிடி இப்பிடின்னு நான் சொன்னதெல்லாம் அவரை அடையாளப்படுத்தத்தான்... அசிங்கப்படுத்த இல்லைங்க. தமிழனின் வீரத்தையே கிள்ளி ஓரத்தில எறிஞ்ச அவருக்கு இது ஒன்னும் பெரிய பிரச்சினை இல்லைங்க.

இந்த விவாதத்தை எத்தனை பேரு பாத்தாங்கன்னு தெரியலைங்க. பாத்ததில எத்தனை பேருக்கு அறிவுப்பூர்வமான உணர்ச்சிக் கொந்தளிப்பு உருவாச்சுன்னு தெரியாதுங்க.

ஆனா, கடல் கடந்து நாவாய் நடத்தி பல நாடுகளை ஜெயிச்சு நம்ம நாகரிகத்தை பதியம் போட்டுட்டு வந்த வீரம் சுமந்த பரம்பரையை சோரம் போன சொல்லாடல் மந்தி ஈரம் இல்லாம நக்கலடிச்சது இதயச்சுவருல ஆணி வச்சு அடிச்சமாதிரி வலிக்குதுங்க.

இதை படிச்சுப் பாத்து துடிக்கிற பாரம்பரியத் தமிழர்களுக்கு ஒன்னு சொல்றேங்க. மலேசியாவில கெடான்னு ஒரு மாநிலம். அங்க இருக்குங்க நம்ம வீரத்தின் எச்சம். தமிழனோட மானத்தின் மிச்சம்.

அதுதாங்க... பெருவுடையத்தேவர் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் கட்டிய கோட்டை. அந்த இடத்தோட ஆரம்ப காலப் பெயர் கடாரம்.

அதனாலதாங்க... அவருக்கு கங்கை கொண்டான்... கடாரம் வென்றான் அப்படிங்கிற பட்டப் பெயர்.

ஜல்லிக்கட்டைப் பத்தி கொள்ளிக்கட்டை வார்த்தைகளைக் கொட்டியது கூட பரவாயில்லைங்க.. உலகத்தின் மூத்த மொழிகள் ஆறுங்க. அதில அழியா இருக்கிறது இரண்டுங்க.

அதுல கலை.. இலக்கியம்...ஆன்மீகம்... அறிவியல்... அரசியல்.. மருத்துவம் என எண்ணெற்ற அதிசயங்களை இன்னைக்கும் இளமையாகவும் வளமையாகவும் வச்சிருக்கிறது நம்ம தமிழ்தாங்க.

அந்தத் தமிழுக்கு சொந்தக்காரங்களை எள்ளி நகையாடிய அந்தப் பல்லி, நம்மளை மண்டையில மொளைச்சிருக்கிற கொண்டையா நெனைச்சுப் பேசுனதுதாங்க இன்னும் ஆற மாட்டேங்குது.

இந்த வலி நியாமுன்னு நினைக்கிற தமிழ் நெஞ்சங்கள்.. அறிமுகமில்லைன்னாலும் அங்கிருந்தே அன்புக் கரங்களை நீட்டி... நேச விரல்களால் நீவி விடுங்க.

அட போப்பா... எத்தனை ஆப்பு வச்சாலும் நாங்க வலிக்காத மாதிரி இருப்போமுன்னு நினைக்கிறவங்க... இந்த ஏழைத் தமிழனை மன்னிச்சு விட்ருங்க.

Monday, December 22, 2014

அஞ்சா நெஞ்சன் அழகிரியின் அழுகுணி ஆட்டம்

அண்ணா ஆரம்பித்த திமுகவை மண்ணுக்குள் புதைக்கா விட மாட்டேன்னும் மல்லுக்கட்டிக்கிட்டு நிக்கிறது போல தெரியுதுங்க அஞ்சா நெஞ்சன்னு சொல்லிக்கிற அழகிரி செய்யுற அழுகுணி ஆட்டம்.

அப்பாவோ உலகத் தமிழர்களுக்கெல்லாம் வழிகாட்டியா இருக்கிற பெரிய தலைவருங்க. அவரு சொன்னா ஆயிரம் பேரு தீக்குளிக்க தயாரா இருக்காங்க.

ஆனா, பெத்த பிள்ளங்க மட்டும் அவரு சொல்றத காது கொடுத்துக் கேட்கவே மாட்டேங்குதுங்க. கட்டிப்புரண்டு சண்டை போடாத ஒன்னுதாங்க குறை. திரை மறைவில எக்கசக்க தில்லாலங்கடி வேலைகளைச் செய்யிறதில ரெண்டு பேருமே கில்லாடிங்களா இருக்கிறாங்க.

அண்ணன் அழகிரி இப்ப ஒரு அசால் குஜால் ஸ்டேட்மெண்ட் விட்டுருக்காருங்க. நான் யாரையும் கட்சியை விட்டு போகச் சொல்லவில்லை. அவங்களாத்தான் போறாங்கன்னு.

அதிமுகவுக்கு போன ரித்திஷ் இருக்காருங்களே... அழகிரி வாயத் தொறந்தா இவரு கொட்டாவி விடுவாரு. அவரு பாத்ரூமுக்குள்ள நுழைஞ்சா இவரு ஒண்ணுக்கு போவாரு. அவ்வளவு நெருக்கமுங்க.

ஆனா, அவரு திடீருன்னு அதிமுகவுக்கு அந்தர் பல்டி அடிச்சிட்டாரு. அழகிரி அண்ணனுக்கு அது பத்தி கவலை இல்லை.

மத்திய அமைச்சராக இருந்த போது எப்போதும் நெப்போலியன்தான் அண்ணன் அழகிரிக்கு எடுபிடி. அண்ணன் பல்லக்காட்டினா நெப்ஸ் விலக்கி விடுவாரு. அந்த அளவுக்கு பாசம்.

இப்ப என்னடான்னா நம்ம அரிவாள் வெட்டு நெப்ஸ் பாரதிய ஜனதாவுக்கு பறந்துருச்சு. போனதுதான் போச்சு அதுபாட்டுக்கு பொசுக்குன்னு ஒரு வார்த்தைய போட்டு தாக்கிட்டு போயிருச்சு.

அண்ணன் அழகிரி ஆசியோடுதான் பாரதிய ஜனதாவுக்கு போனேன்னு அது போட்ட குண்டு அழகிரி அடிவயிற்றில கிரைண்டர் ஓட வச்சுருச்சுங்க.

இனி சும்மா இருந்தா நம்ம மேல காவி வேட்டியப் போத்தி தம்பிமாருங்க கதகளி ஆடிடுவாங்கன்னு அதிரடியா அறிக்கை விட்டு திமுக தலைமையைத் திருப்திப்படுத்தி இருக்காருங்க நம்ம அழகிரி.

கட்சியின் ஓரத்துக்குக்கூட சேதாரம் ஏற்படுற மாதிரி நான் நடக்க மாட்டேன். கட்சி சும்மா பெல்ட் காங்கிரட்டுல நிக்கிற கட்டடம் மாதிரி ஸ்ட்ராங்க இருக்கணுமுன்னுதான் நான் அப்பப்ப அறிக்கை விடுறேன்னு இப்ப சொல்றாரு.

பொக்க வாயி கெழவி வாயில பொங்க வச்ச மாதிரி இருக்குங்க இவரு பேச்சு. நேத்து வரைக்கு இவங்க நெஞ்சை நக்கிக்கிட்டு இருந்தாங்களாம். இன்னைக்கு நஞ்சுபோன போன தலகாணி மாதிரி பிஞ்சு நிக்கிறாங்களாம்.

இது கேணப்பய வாயில கிச்சடி கிண்டுண மாதிரி இல்லை. திமுக காத்துப் போன பலூன் மாதிரி கவுந்து படுத்துக் கிடக்குங்க. அதை கோமா அளவுக்கு அண்ணன் கொண்டு போகாமல் இருந்தால் சரிதாங்க.

திமுக அழியாம இருக்கணுமுன்னா அண்ணன் அறிக்கை விடுறத நிப்பாட்டிட்டு அமைதியா இருக்குறதுதாங்க ஒரே வழி.

ஆனா, ஓட்டைப் பானை ஒழுகாம இருக்குமா... மூட்டைப்பூச்சி கடிக்கா இருக்குமா....அதுமாதிரி அண்ணன் வாயி அடங்கிக் கிடக்குமா....?. காலக் கணக்கை யார்தாங்க கணிக்க முடியும்.