Monday, January 11, 2010

தமிழன் நெஞ்சில் வீரமும் இல்லை... ஈரமும் இல்லை...



  அன்று நடுரோட்டில்
செத்துப் போனது
ஆய்வாளர் வெற்றிவேல்
மட்டுமல்ல
மறத்தமிழனின் மானமும்
மனிதாபிமானமும்தான்




ஐயோ...ஐயோ....
பார்க்கும்போது நெஞ்சு
பற்றி எரிகிறதே..
.உயிர் உறைகிறதே..

ரத்தச் சகதியில்
அந்த உருவம்
புரண்டு படுக்கிறது
பார்த்த என் இதயம்
வயிற்றுக்கும்
தொண்டைகுமாய்
உருண்டு துடிக்கிறது

எப்படியாவது என்னைக்
காபாற்றுங்களேன் என
துண்டித்த காலோடும்
துடிக்கின்ற உடலோடும்
கையை நீட்டுகிறது

உடலை வளைத்து
குனிந்து பார்த்த
சபாரி சூட் அணிந்த
சண்டாள நபர் ஒருவன்
எட்டடி பின்னால்
பாய்ந்து... தான் ஒரு
'பொட்டை' என்பதை
பொறுப்பாக சொல்லி
இருக்கிறான்

அந்த ஆய்வாளர்
ஆள் இல்லாத இடத்தில்
அநாதையாக சாகவில்லை

சுற்றி நின்று நமது
வீரத் தமிழர்கள்
வேடிக்கை பார்க்க
இரத்தம் வற்றி வற்றி
செத்திருக்கிறார்

கொலைகளையும்
கொள்ளைகளையும்
திரையில் பார்த்துப் பார்த்து
திகட்டிப் போனதால்தானா
அந்தக் கூட்டம்
நிஜத்தில் பார்த்து
நெக்குருகி நின்றது

நீரில் விழுந்து தத்தளித்த
ஒருவனைக் காப்பாற்ற
ஹெலிகாப்டரில் இருந்து
குதித்தாராம் ஜப்பான் நாட்டு
அமைச்சர் ஒருவர்

நேரில் ஒரு உயிர்
துள்ளத் துடிக்க
போய்க் கொண்டிருக்கும்போது
வேட்டியை மடித்துக் கட்டி
முகம் முழுக்க திகில் படர
முப்பதடி தூரத்தில் நிற்கிறார்
நமது ஊர் அமைச்சர் ஒருவர்

துணிந்த யாராவது ஒருவர்
துணியைப் போல தோளில்
அள்ளிப் போட்டுக் கொண்டு
போயிருந்தால் ஒருவேளை
அந்த உயிரைக் காப்பாற்றி
இருக்கலாம்

அதற்கு பின்னால்
அந்த உயிர் போயிருந்தால்கூட
மனிதாபிமானத்தில் சிறந்தவன்
தமிழன் என்ற மரியாதையையாவது
காப்பாற்றி இருக்கலாம்

வீரத்திலும் தீரத்திலும்
உலகத்தாரை விஞ்சி நிற்கின்ற
மூத்த குடிமக்களாம் நாம்
இனிமேல் யாராவது இப்படிச்
சொன்னால் அதைவிட கேவலம்
வேறு ஒன்றும் இல்லை

தமிழன் நெஞ்சத்தில்
வீரமும் இல்லை
ஈரமும் இல்லை
மானமும் இல்லை

நான் வேதனைப்படுகிறேன்
வெந்து போகிறேன்
அந்த ஆய்வாளரின்
மரணத்துக்கு மட்டுமல்ல

நான் தமிழன் என்று
சொல்லிக் கொள்ளவும்தான்

அந்த இடத்தில் நீ
இருந்திருந்தால் என
கேள்வி எழுப்பி என்னைக்
கேவலப்படுத்தி விடாதீர்கள்

இது போல் துடித்த ஓர்
உயிரைத் தோளில் சுமந்து
முச்சிரைக்க ஓடி
ரிக்ஷாவில் ஏற்றி
மருத்துவமனையில் சேர்த்து
காப்பாற்ற உதவிய
சின்ன நினைவு ஒன்று
என் இதயத்தில் இன்னும்
இருக்கிறது.

9.1.2010 தினமலர் அகப்பக்கத்தில் இந்த அவலக் காட்சி வீடியோ காட்சியாக வெளியாகி இருக்கிறது. அதைப் பார்த்த பின்னர்தான் என்னுடைய பதிவைச் செய்திருக்கிறேன். வாய்ப்பிருந்தால் நீங்களும் பாருங்கள். அந்த ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்யுங்கள்.



No comments:

Post a Comment