Saturday, March 27, 2010

பென்னாகரம் தொகுதி வெற்றி யாருக்கு?

தமிழ் நாட்டில் பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரயாணம் செய்வதற்கு உடல் நிலை ஒத்து வராத நிலையிலும் கூட தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று இருக்கிறார் என்றால் இந்தத் தேர்தல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள்.



இந்த தொகுதியில் பலர் போட்டி போட்டாலும் நான்கு கட்சிகள்தான் பிரதானமானவை. திமுக, அதிமுக, பாமக. தேதிமுதிக. இந்தக் கட்சிகளின் தலைவர்கள் எல்லாருமே தங்களுக்குத்தான் வெற்றி என மார் தட்டுகிறார்கள். இதனிடையே லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு திமுக வெற்றி பெறும் என கூறுகிறது.. பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் இதை ஒத்துக்  கொள்ளவில்லை. திமுக எங்களிடம் திக்கு முக்காடப் போகிறது என தந்தையும் மகன் அன்பு மணியும் பீரங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இந்த தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெறப்போகிறது. அடுத்த சில நாட்களில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போகிறது என பிரச்சாரத்தின் போது ஒரு "காமெடி" வெடிகுண்டை வீசி விட்டு பேசிய அம்மா, களைப்புத் தீர தோழியுடன் ஓய்வெடுக்கப் போய்விட்டார்.



கேப்டன் விஜயகாந்தின் தன்னம்பிக்கைதான் ஆச்சரியப்படும் வகையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. வைப்புத் தொகையை வாங்க முடியாது என்பது தெரிந்தும் சங்கடப்படாமல் பிரச்சாரத்தில் சங்க நாதம் எழுப்பு வருகிறார் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

" ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்த காலகட்டத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறுவது போல் தோற்றம் அளிக்கும். அந்த வெற்றி ஜனநாயக முறைப்படி சரி என்றாலும் அது திமுகவுக்கு கிடைத்த வெற்றி என கருத முடியாது.



அதிமுக, பாமக, தேமுதிக போன்ற எதிர்க்கட்சிகளின் விவேகமற்ற நடவடிக்கைகளால் அவர்களாக திமுகவுக்கு தாம்பளத்தில் வைத்து  கொடுத்தவை அந்த வெற்றிகள் எல்லாம்.



திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் இருந்தாலும் தலைமைத்துவ மட்டத்தில் வலுவாகவே உள்ளது. அதனால் பெரும்பாலும் வாக்குகள் சிதற வழி இல்லை. மேலும் திமுக தலைவர்களின் அணுகு முறையும் துணை முதல்வரின் ஆடம்பரம் இல்லாத நடவடிக்கைகளும் மக்களை ஈர்த்திருக்கிறது.

ஆனால், எதிர் அணியில் அனைத்துக் கட்சிகளும் சிதறிக்கிடக்கின்றன. மேலும் ஒருவரை ஒருவர் வசைபாடிக்கொள்ளவும் தயங்குவதில்லை. மருத்துவர் ராமதாஸ் கூட்டணி மாறுவதில் ஒரு குத்தாட்டமே நடத்தக் கூடியவர். அதனால் அவருடைய பேச்சுக்களை மக்கள் நம்பத் தயாராக இல்லை.  நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் வடிக்கும் ஒரே தலைவர் என்ற தோற்றத்தை மக்கள் தொலைக்காட்சி மூலமாக ஏற்படுத்தினார். இப்போது அந்த பேச்சு... காற்றோடு போச்சு...

ஜெயலலிதாவுக்கு வேறு ஏதோ பிரச்சினை என மக்கள் கருதும் நிலைக்கு ஆளாகி இருப்பதாக அதிமுக தொண்டர்களே நினைக்கும் அளவுக்கு அவருடைய நடவடிக்கைகள் உள்ளன. இரண்டு நாள் வெளியே தலை காட்டினால் இரண்டு மாதங்களுக்கு தோழியோடு சோழி விளையாடப் போய் விடுகிறார். ஏதோ ஒப்புக்கு கட்சி நடத்துவதுபோல் இருப்பதாக ஒரு பேச்சும் அடிபடுகிறது.



விஜயகாந்தின் அரசியல் வீரத்தில் மக்களுக்கு இருந்த ஈர்ப்பு குறைந்து விட்டதாகவே தெரிகிறது. ஏனென்றால் கூட்டணி இல்லாமல் போட்டியிட பெரிய கட்சிகளே பிரம்மப் பிரயத்தனப்படும்போது இவர் தெய்வத்தோடும் மக்களோடும் தான் கூட்டணி என சின்னப் பிள்ளைபோல் சொல்லிக் கொண்டிருப்பதை மக்கள் ரசிப்பது மாதிரி தெரியவில்லை.

ஆனால், இவர்கள் அனைவருமே தங்களால் முடிந்த வாக்குகளை மக்களிடம் இருந்து பெற்று வலிமையை நிலை நாட்ட போட்டி போடுகிறார்கள். விளைவு ... வீழ்ச்சி இவர்களுக்கு வெற்றி திமுக கூட்டணிக்கு...

தேர்தல் முடிந்த பின்னர்  திமுக கூட்டணி பெற்ற வாக்குகளையும் இவர்கள் பெற்ற வாக்குகளையும் கூட்டிப் பாருங்கள். தார்மீக வெற்றி யாருக்கு என்பது தெரியும். இதற்கு என்ன காரணம் ஈகோ... கூட்டணி தலைமை யாருக்கு என்ற ஈகோ... இந்த நிலை தொடரும் வரை திமுகவை வீழ்த்துவது என்பது கனவிலும் நடக்காத காரியமாகும்.

ஒருவேளை துணை முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் மத்திய அமைச்சர் முக. அழகிரிக்கும் உட்கட்சிச் சண்டை வந்து திமுக பிளவு பட்டாலும் கூட உதய சூரியன் சின்னம் வைத்திருக்கும் தரப்பும்   காங்கிரசும் இணைந்து நின்றால் அந்தக் கூட்டணிக்கு வெற்றி நிச்சயம்.

2 comments:

  1. நல்ல இடுகை... நல்ல மதிப்பீடுகளும் கூட

    அது சரி, இதையெல்லாம் எதிர்கட்சி / கூட்டணித்தலைவர்கள் படிப்பதே இல்லையா ? இல்லை அவர்களை சுற்றியுள்ள ஆமாம் சாமிகள் அதை இதை சொல்லி எதிர்கட்சி / கூட்டணித்தலைவர்களின் கண்களை மறைத்து விடுகின்றனரா ?

    போகட்டும். இன்றும் மார்ச் 30 ; இப்ப லேட்டஸ்டு நிலமை என்னாண்ணே ...அதை சொல்லிபோடுங்க !! ஆவலா காத்துக்கிட்டு இருக்கோமில்ல

    மேலும் :

    http://manakkan.blogspot.com/2010/03/blog-post_29.html

    ReplyDelete
  2. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete