Wednesday, September 16, 2009

தமிழ்த்தாய்க்கு முதல் வணக்கம்

முடிபுனைந்து அரசாண்ட மூவேந்தர் உயிராகி
         மூவுலகை வென்ற திருவே!
முக்கடலும் பொங்கியுனை மூழ்கடித்த போதுமெழில்
        முத்தாக விளைந்த கலையே!
இடிமழைக்கும் மின்னலொடு எழுந்தபெரும் காற்றுக்கும்
       இளகாது நின்ற மலையே!
எதிர்ப்பெனவே வந்ததெல்லாம் எரிவிழுந்த துரும்பாக
       இமயத்தில் எழுந்த ஒளியே!
அடிமுதலும் அறியாத அகிலத்தின் முன்னவளே
      அழியாது நிலைத்த வடிவே!
அருந்தவமே! செந்தமிழே! அணையாத மணிவிளக்கே!
      ஆதார மான பொருளே!
அடிதொழுது நிற்கின்றேன் அறியாத சிறுபிள்ளை
      அனுதினமும் உன்னை வணங்கி
அன்போடு எனைத்தாங்கி அருளோடு என்நாவில்
     அமிழ்தாக ஊறு தாயே!

No comments:

Post a Comment