Wednesday, September 23, 2009

வெட்கமா இருக்குதுங்க

எனக்கு தமிழ் மக்களை நினைச்சா வேதனையாகவும் வெட்கமாகவும் இருக்குதுங்க. ஒரு முதலாளி வேலைக்காரனாகவும் பிச்சைக்காரனாகவும் இருக்கிற அவலம் நாகரீகம் அடையாத பல நாடுகளில இருக்கிறது சகஜம் தானுங்க.

ஆனால், இனத்தாலும் மொழியாலும் மூத்தவர்களான தமிழர்களின் போக்கு ரொம்ப விசித்திரமா இருக்குதுங்க. இவர்கள் அரசியல்வாதிகளுக்கும் அரிதாரம் பூசிய நடிகர் நடிகைகளுக்கும் ஆண்டாண்டு காலமா அடிமையா இருக்கிற அசிங்கத்தை இன்னும் உணராமலேயே இருப்பது கொடுமையா இருக்குதுங்க.

பொதுமக்கள் வாக்குப் போட்டாத்தாங்க அரசியல்வாதி அரியாசனம் ஏற முடியும். அப்படி வாக்கு போட்டு ஒரு வேலைக்காரனை உருவாக்குகிற முதலாளி அந்த வேலைக்காரனையே முதலாளியாக நினைக்கிற சிந்தனைக்கு அடிமையானது துரதிருஷ்டமுங்க.




அரசியல்வாதிகள் இருப்பது, நடப்பது, படுப்பது, சாப்பிடுவது, கோடிகோடியாக செலவு செய்வது எல்லாமே மக்களின் வரிப்பணமுங்க. ஆனா, அந்த மக்கள் ஒரு கிலோ அரிசிக்காக, அதிகாரிகள் போடும் ஒரு கையெழுத்துக்காக, ரேஷன் கார்டுக்காக, சான்றிதழ்களுக்காக படுற சிரமம் இருக்குதுங்களே அது சொல்லி மாளாதுங்க.

இதே மாதிரிதாங்க நடிகர்களுடைய கதையும்.  ஒருவேளை சோற்றுக்காக உழைத்து உருக்குலைந்து போன அடித்தட்டு மக்களின் ஒரே பொழுது போக்கு திரைப்படம்தாங்க. இவங்க கொடுக்கிற காசுல அவங்க வசதியா இருக்காங்க.
காசு கொடுத்து அவங்களை கோபுரத்தில் உட்கார வச்ச பொதுஜனம் அந்த நடிகர்களைப் பார்ப்பதற்கு நாயா அலைவதுதான் புரியலைங்க. பல நடிக...நடிகைகள் அகவாழ்க்கையிலும் புறவாழ்க்கையிலும் சரியா இல்லைங்க. அவங்கள இந்த அப்பாவி மக்கள் தெய்வமா நினைக்கிறாங்க.

ஆனா, அந்த மக்களை நடிக, நடிகைங்க எப்படி நினைக்கிறாங்க. கேவலமாத்தானே பார்க்கிறாங்க. பொது மக்கள் எல்லாம் ஒன்று கூடி ஒரு நாள் நாம தியேட்டருக்கு போயி படம்பார்க்கக்கூடாதுன்னு முடிவு எடுத்தா என்ன ஆகுமுங்க.

எவ்வளவு பெரிய நடிகரா இருந்தாலும் மூட்டை கட்டிக்கிட்டு வீட்டுக்கு போக வேணுமுங்க. இதுக்கு பொதுமக்களிடம் பொதுவான புரிந்துணர்வும் ஒற்றுமையும் இருக்கணுமுங்க. ஆனால் எல்லா கட்சி அரசியல்வாதிகளும் எல்லா மொழி திரைப்பட நடிகர்களும் அந்த ஒற்றுமை ஏற்படுவதை எந்தக் காலத்திலும் அனுமதிக்க மாட்டாங்க.

அப்படி ஒரு ஒற்றுமையும் விழிப்புணர்வும் ஏற்பட்டா ஒரே வருடத்தில இந்தியா வல்லரசு தாங்க. தயவு செய்து வலைப்பதிவாளர்கள் இதைக் கவனத்தில வச்சுக்கிட்டு இதுக்கும் ஒரு பகுதியை ஒதுக்குங்க. இதில ஏதாவது தவறு இருந்தா சுட்டிக்காட்டுங்க. இல்லைன்னா குட்டிக் காட்டுங்க. இரண்டுமே எனக்கு சந்தோசம் தாங்க.

1 comment:

  1. எங்கே இருந்துங்க நமிதா படத்தை புடிச்சீங்க.. பார்த்தவுடனே சூடான விஷயத்த பத்தி பேசுவீங்கன்னா சமுதாயத்தை பத்தியில பேசிட்டீங்க... இது அதைவிட சூடால்லே இருக்கு.... வாழ்த்துகள்.. தொடரட்டும் உங்கள் அலசல்கள்!!

    ReplyDelete