Wednesday, September 23, 2009

நம்ம ஜனங்க ரொம்ப ஏமாளிங்க

சமீபத்தில ஜூனியர் விகடன்ல ஒரு செய்தி படிச்சேங்க. சென்னையில மோட்டார் உதிரிப் பாகங்கள் விற்கும் ரஞ்சித் குமார் என்பவருக்கு அமெரிக்காவில் வசிக்கும் மைக்கேல் ராபர்ட் என்பவர் ஒரு மின்னஞ்சல் அனுப்புறாருங்க.


நான் இந்தியாவுல தொழில் தொடங்கப் போறேன். அதுக்கும் உன்னுடைய உதவி தேவை. அதற்கான சேவைக் கட்டணமாக 10 கோடி ரூபாய் தருகிறேன். முதல்ல அதுக்கு பிணையாக 25 லட்சம் ரூபாயை வங்கியிலே செலுத்து.

முன்னபின்ன தெரியாத ஒருத்தன் உனக்கு 10 கோடி ரூபாய் தர்றேன்னதும் நாக்கை தொங்கப் போட்டுக்கிட்டு போனியே. இப்ப என்னாச்சு...அவன் மூனு நாமத்தை பட்டையா சாத்திட்டு போயிட்டான்

ஏமாந்த பின்னாடி போலீஸ் நடவடிக்கை எடுக்கலைன்னு காட்டுக் கத்தா கத்துனா என்ன அர்த்தம். இப்ப போலீசுக்கிட்ட போறியே. இவ்வளவு பெரிய தொகை கிடைக்கிறதுன்னா முன்கூட்டியே போலீசுக்கிட்ட போயி உண்மையா பொய்யான்னு தெரிஞ்சிருக்கலாமில்லை.

இன்னொரு விஷயத்தையும் நீங்க பார்க்கணும். சுளையா 10 கோடி ரூபாய தூக்கி கொடுக்க அவன் என்ன நம்மள மாதிரி கேணையனா... கிறுக்கனா...

அப்புறம் மேலும் ஒரு வருத்தமான செய்திங்க. இப்ப பாருங்க சென்னையில் ஒரு லட்சம் போட்டா அதுக்கு 48 சதவீதம் வட்டி தருவதாக சிட்டி லிமோசின் என்ற நிறுவனம் கிளுகிளுப்பாக அறிக்கை விட்டது.

அவ்வளவுதான் என்ன ஏதுன்னு விசாரிக்காமல் இருக்கிற பணத்தை அள்ளிக் கொண்டு போய் கொட்டி ஒரே நாளில் அந்தக் நிறுவனத்தின் முதலாளியை கோடீஸ்வரனாக்கி விட்டுத்தான் மறுவேலை பார்த்தாங்க நம்ம மக்கள்.




சுமார் 150 கோடி ரூபாயை ஏப்பம்விட்டுவிட்டு அந்த மோசடிக்காரன் சம்மர் ஷாட் அடித்து தலைமறைவாகிவிட்டான். ஏமாந்த மக்கள் சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்திற்கு நடைபயணம் செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்தப் பேராசைக்கு என்ன காரணம். தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு சாரார் செல்வத்தில் மிதந்து ஆட்டம் பாட்டமுன்னு அதகளம் பண்ணிக்கிட்டு இருக்காங்க. இது சாதாரண மக்களை நிம்மதியா சாப்பிடவிடாம செய்யுற காரியமா போயிட்டது.

அதனால எப்படியாவது பணக்காரராகி விடணும்கிற ஆசையில இந்த மக்கள்... ஆப்பு கட்டையிலே அவங்களாகவே போயி உட்காந்துக்கிடுறாங்க. இது மாதிரி நல்லவங்க இருக்கிறவரை எத்தனை மோசடிக் கம்பெனி வேணுமின்னாலும் நடத்தலாமுன்னு வளைச்சு வளைச்சு சென்னையையே வட்டம் போடுறாங்க.

நம்ம சனங்க ரொம்ப நல்லவங்க. புதுசா ஒரு கம்பெனி வந்தா போதும்... பணத்தை போட போட்டி போடுவாங்க. பல கம்பெனிங்க ஏமாத்திட்டாங்களேன்னு அவங்ககிட்ட சொல்லிப் பாருங்க....அவங்க பதில் இப்படித்தான் இருக்கும்.

" நாங்க பணம் போட்டிருக்கிற கம்பெனி அது மாதிரி இல்லைங்க. எங்க முதலாளி ரொம்ப நல்லவருங்க"

அப்புறம் அவன் அல்வா கொடுத்த பின்னர்தான் 'அய்யோ... அப்பா...ன்னு' வாயிலையும் வயித்திலையும் அடிச்சுக்கிட்டு புரளுவாங்க. இவங்க வேதனை எனக்கும் வேதனைதான். மனசு வலிக்குதுங்க. ஆனா இவங்க பணத்தை அவன் வந்து திருடலை. இவங்களா போயி திருட்டுக் கொடுத்தாங்க. அதனால பாதிதான் பரிதாபப்பட முடிகிறது. பணம் ரொம்ப முக்கியம்தாங்க. அதுக்காக பறக்கிறத நம்பி இருக்கிறத இழக்கலாமாங்க...?

பணக்காரங்க ஏமாந்தா அது அவங்களுக்கு காணாம போன கைத்துண்டு மாதிரிங்க. ஏழைங்க ஏமாந்தா அது உடம்புல இருக்கிற ஒட்டுமொத்த துணி மாதிரிங்க. மானம் போயிடும். மரியாதை போயிடும். நிம்மதி போயிடும்.

இதுமாதிரி சுலபமா சம்பாதிக்கிற ஆசை இருக்கிறவங்கள நீங்க சந்திக்க நேர்ந்தா தயவு செஞ்சு அவங்க மனச மாத்தப்பாருங்க.

No comments:

Post a Comment