Sunday, September 27, 2009

தூளாகும் துயரங்கள்

மேகநதி மீதினிலே மென்காற்று நீந்திவர
          மின்னலொடு மழையாய் வீழும்
மேலெழும்பும் வெய்யோனால் மேருமலை பனியுருகி
          மீன்துள்ளும் ஆறாய் நீளும்
மோகமொடு நந்தவனம் மொய்க்கின்ற தேனீக்கள்
         முயற்சியொரு தேன்கூ டாகும்
முகமலர்ந்த சிப்பிக்குள் முந்திவிழும் நீர்த்துளிதான்
         முறுவலிக்கும் முத்தாய் மாறும்
சோகமென்ன செய்துவிடும் தூக்கியெறி துரத்திமிதி
          துன்பங்கள் விலகி ஓடும்
துவளாத மனத்தோடு துடிக்கின்ற தோள்சேர்ந்தால்
         துயரங்கள் தூள்தூ ளாகும்
பாகமொரு உடல்கொண்ட பார்வதியின் அண்ணனவன்
        படையாக நிற்கும் திருவே
பணிவோர்க்கும் எளியோர்க்கும் பரிவோடு அருள்கின்ற
        பதினெட்டாம் படிக்க ருப்பே

No comments:

Post a Comment