Monday, September 28, 2009

தலைத் தீபாவளி

"ஏண்டி இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி இருப்பே...ஒன்னு சொந்தப்புத்தி வேணும். இல்லாட்டி சொல் புத்தி வேணும். இரண்டுமே


இல்லாட்டி என்ன பண்ண முடியும்"

கலாவின் வார்த்தைகள் இப்படி கடுமையாக வந்து விழுந்தன. ஆனால் இதைக் காதில் வாங்காதது போல் இருந்தால் சுமதி.

" என்னடி நான் பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கேன். நவராத்திரிக்கு பிடிச்சுவச்ச கொழுக் கட்டை மாதிரி உட்கார்ந்துக் கிட்டு இருக்கே"

சுமதியின் முடியைப் பிடித்து இழுத்து அவளுடைய முகத்தை தன்பக்கம் திருப்பினாள் கலா.

"இஷ்...விடுங்கக்கா வலிக்குது. நான் என்ன செய்யட்டும் அக்கா... வீட்டில சொல்றதத்தானே கேட்க முடியும். என்னோட இஷ்டத்துக்கு எதுவும்

செய்யமுடியுமா"

சுமதி சாதாரணமாக பேசினாலும் அந்தப் பேச்சில் ஒரு இனந்தெரியாத சோகம் இழையோடிக் கொண்டிருப்பதை கலாவால் உணர முடிந்தது.

கலாவும் சுமதியும் கோலாலம்பூரில் ஒரு வங்கியில் பணி புரிகிறார்கள். கலாவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. சுமதிக்கு இன்னும்
திருமணம் ஆகவில்லை.

இந்தா... அந்த... என்று வயது இருபத்தி எட்டைத் தொட்டு விட்டது. திருமணம் ஆகவில்லை என்பதற்காக சுமதி சுமாராக இருப்பாள் என்று தப்புக் கணக்கு போட்டு விடாதீர்கள். பார்ப்பவர்களைச் சுண்டி இழுக்கக்கூடிய கொள்ளை அழகு.

அதே வங்கியில் வேலை பார்க்கும் பார்த்திபனுக்கு சுமதி மீது ஒரு கண். எப்படியாவது அவளுடைய மனதைத் திருடி அவர்கள் வீட்டுக்கு மருமகனாகி விட வேண்டும் என ஆசைப்பட்டான்.

எவ்வளவோ முயன்றும் சுமதியிடம் அவனால் நெருங்க முடியவில்லை. எதிரே பார்த்துக் கொண்டால் ஒரு புன்னகைதான். அதற்குமேல்

சுமதியிடமிருந்து எதையும் பெற முடியவில்லை.

அரசல் புரசலாக பார்த்திபனின் ஆசையைப் புரிந்து கொண்ட கலா மெதுவாக சுமதியிடம் பேச்சை எடுத்தாள். ஆனால் இதுமாதிரி பேச்சு வந்தால் சுமதி பட்டென்று வெட்டி விடுவாள்.

"பாரு சுமதி...பார்த்திபன் ரொம்ப நல்ல பையன். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. மத்தவனுங்க மாதிரி பிக்கப்பு...டிராப்பு ... எஸ்கேப்புன்னு போற பார்ட்டி கிடையாது. நீ மட்டும் சரின்னு சொன்னா உன்னைய கண்ணுக்கு கண்ணா வச்சு பாத்துக்குவான்"

பார்த்திபன் பேச்சை எடுத்தால் சுமதியின் கண்ணுக்குள் ஒரு பல்பு எரியும். அதை சாமர்த்தியமாக மறைத்துக் கொள்வாள்.

"அக்கா... நான் என்ன ஆசையில்லாத ஜடமுன்னா நினைச்சீங்க. எனக்கும் மத்த பொண்ணுங்க மாதிரி கல்யாணம் பண்ணி வாழக் கூடாதுன்னா
இருக்கேன்.எங்க அப்பாவும் அம்மாவும் ஜாதி பாக்கிறவங்க. எங்க ஜாதிப் பையனுக்குத்தான் என்னைக் கட்டிக் கொடுக்கணுமாம். எத்தனையோ நல்ல
மாப்பிள்ளை வந்தும் இந்த பாழாய்ப்போன ஜாதியாலே தட்டிப் போய்க்கிட்டே இருக்கு. என்னையப் பெத்தவங்களோ ஜாதியில் பிடிவாதமா
இருக்காங்க. அவங்கள மீறி போறதுக்கும் என்னோட மனசு கேட்க மாட்டேங்கிறது. நான் என்ன செய்யட்டும். சொல்லுங்க அக்கா..."

சுமதியின் கண்களில் இருந்து முத்து முத்தாக கண்ணீர்த்துளி கன்னத்தில் வழிந்தது. கலாவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. சுமதியின் பெற்
றோர்கள் மிகவும் நல்லவர்கள். சுமதி மீது பாசத்தைக் கொட்டி
வளர்த்தார்கள் இந்த ஒரு விஷயத்தில் மட்டும்தான் அவர்கள் ஏறுக்கு மாறாக இருக்கிறார்கள்.

காலம் உருண்டது. சுமதிக்கும் வயது ஏறியது. காதோரத்தில் ஒன்றிரண்டு நரைமுடிகள் எட்டிப் பார்த்தன. ஆனால் அவளின் அழகும் வனப்பும் மட்டும்
அப்படியே இருந்தன. வேளை மாற்றலாகி ஜொகூருக்கு போய்விட்டாள்.

தீபாவளி வந்து விட்டது. சுமதி தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பாகவே கோலாலம்பூருக்கு கிளம்பினாள். பேருந்து புடுராயா நிலையத்தில் வந்து
நின்றது.பெட்டியை எடுத்துக் கொண்டு இறங்கியவள் அப்படியே திகைத்து நின்றாள். எதிரே பார்த்திபன்.

"எப்படி இருக்கிறாய் சுமதி"

"அப்படியேதான் இருக்கிறேன்"

அந்த ஒரு வார்த்தையில் ஆயிரம் அர்த்தங்கள்.

"ஏன்..."பார்த்திபனின் இதயத்தில் இருந்து எழுந்த கேள்வி இது.

"ஜாதிதான் முக்கியம் என்று வந்த மாப்பிள்ளை களை எல்லாம் அப்போது வேண்டாம் என்றார்கள் என் அப்பாவும் அம்மாவும். ஆனால் இப்போது
எந்த மாப்பிள்ளையாக இருந்தாலும் பரவாயில்லை என்கிறார்கள். மாப்பிள்ளைதான் வந்த பாடில்லை"

சுமதியின் வார்த்தை விம்மலாக வெளி வந்தது.

"உனக்காக நான் இருக்கும்போது ஊரெல்லாம் ஏன் மாப்பிள்ளை தேடுகிறார்கள் உன் பெற்றோர்கள். கொடு பெட்டியை..." என்றான் பார்த்திபன்.

பெட்டியோடு மனசையும் சேர்த்தே கொடுத்தாள் சுமதி.

இந்தத் தீபாவளி அவர்களுக்கு இனிமையான தீபாவளி. அடுத்த தீபாவளி தலைத்தீபாவளி.

(மலேசியாவில் இருந்து வந்த மண்வாசனைக் கதை இது. அங்கும் ஜாதி என்ற ஜோதி அணையாமல் இருப்பதை இந்தக் கதையின் கரு அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறது. படிப்பவர்களுக்கு பிடித்திருந்தால் விமர்சனங்களை பதிவு செய்யுங்கள)

1 comment: